Wednesday, August 10, 2011

போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது.

தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிக்கிறார்கள், அது இலங்கை தமிழ் மீனவர்களைப் பாதிக்கிறது என்கிறார். இதில் உண்மை என்னவெனில், இந்திய கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 70-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஏதோ தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதால் ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போல் கோத்தபய ராஜபக்சே பேசியுள்ளார். ஆனால் ஈழத்தமிழர் மீனவர்கள் ஆழ் கடலிற்கு வந்து மீன் பிடிக்க முடியாத வகையில் அவர்களை குறைந்த தூரத்திற்கு மட்டுமே கடலில் சென்று மீன் பிடிக்க இலங்கை அரசு அனுமதிக்கிறது.

அவர்கள் நீண்ட தூரம் சென்று மீன்பிடிக்க முடியாத அளவிற்கே டீசல் வழங்குகிறது. தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது.

அதை விட்டுவிட்டு போர்க்குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப்பயனையும் தராது என்று கோத்தபய கூறியுள்ளார். இவர் தமிழக முதல்- அமைச்சர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் தமிழர்கள் முகாம்களிலேயே உள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இலங்கை அரசு செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வருகிறது. எனவே அந்நாட்டு அரசுக்கு எதிரான மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.

இத்தீர்மானம் குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் கூட, “இலங்கை அரசை வழிக்கு கொண்டு வரவே பொருளாதார தடை அவசியமாகிறது” என்று கூறினார். அதுமட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் அங்கு தமிழர்கள் எப்படிப்பட்ட அடக்கு முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தமிழக முதல்- அமைச்சர் நன்றாகவே அறிந்துள்ளார். அதனால்தான் அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று பறைசாற்ற விரும்பும் இலங்கை அரசு சூழ்ச்சியுடன் நிறைவேற்ற முற்பட்ட கொழும்பு, தூத்துக்குடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய ராஜபக்சே கூறுகிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவே இலங்கைக்கு எதிராக நிதித் தடை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அயலுறவுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும்.

அதுமட்டுமின்றி, இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலேயே இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை தொடங்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும் நிலை ஏற்படும்.

விரைவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தொடங்கும், அதில் ஈழத் தமிழர்களை ராஜபக்சே கும்பல் இனப்படு கொலை செய்தது உறுதியாகும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

No comments: