Monday, August 15, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தனின் மரண தண்டனையை எதிர்த்து நாளை பொதுக்கூட்டம்; சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்குப் பிறகும் இந்திய குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி நாளை (16-ந்தேதி) சென்னையில் நாம் தமிழர் கட்சியும் பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன், விடுதலை ராசேந்திரன், சாகுல் அமீது, கலைகோட்டுதயம், பால் நியூமென் அய்யநாதன், அற்புதம் அம்மாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்து மேலும் சீமான் கூறியதாவது:-

இன்றைய உலகம் மரண தண்டனையை சட்டத்தின் பாற்பட்ட நீதியாக கருதவில்லை. அதனால் தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது.

தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால் இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே வாழ் வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபி மானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது. அதன்படியே குற்றம் இழைக்காத நமது ரத்த சொந்தங்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு 20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்கு பிறகும், தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நியாயத்தின் படியும், நீதியின் படியும், சட்டத்தின் படியும் தவறு இழைக்காத அவர்களின் விடுதலைக்காக இறுதி வரை போராடி வெல்வது நமது முதற்கடமை. இந்த நிலையில் மரண தண்டனையை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்னும் பதாகையின் கீழ் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை தியாகராய நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு தமிழர்கள், மனித உரிமைக்காக களம் காணும் அனைவரும் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: