Monday, September 5, 2011

வேலூரில் இருந்து சென்னை வரை மரண தண்டனையை ஒழிக்க 5 நாள் நடை பயணம்: சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது.

வேலூர் மத்திய சிறைக்கு அருகே இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட்டு 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும். நாம் தமிழர் கட்சியினர் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு மேற்கொள்ளும் இந்தப் பரப்புரை பயணம், சத்துவாச்சேரி, ரத்னகிரி, கீழ்விசாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, அம்மூர், வாலாஜா, காவேரிப்பாக்கம், ஒச்சேரி பனப்பாக்கம், தாமல், காஞ்சீபுரம், ஆசூர், ஐயம்பேட்டை, அவலூர், ஏகினாம்பேட்டை, வாலாஜாபாத், படப்பை, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, போரூர் வழியாக வரும் 10-ந்தேதி சனிக்கிழமை சென்னை எம்.ஜி.ஆர். நகர் வந்து சேரும்.

3 பேரின் மரண தண்டனையை ஒழிக்க கோருவது ஏன் என்பதை விளக்கி வழியே சந்திக்கும் மக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்படும். பரப்புரை பயணம் முடிவில் எம்.ஜி.ஆர்.நகரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமான் நியாயவுரையாற்றுகிறார்.

No comments: