Wednesday, June 26, 2013

உத்தரகாண்ட் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஓட்டியவர் மதுரை பைலட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம் மட்டுமின்றி இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது. ஆபரேசன் ரகத் என்ற பெயரில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.






விமானப்படைக்கு சொந்தமான 45 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்.ஐ.17வி 5 ரக ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.





நேற்று முன்தினம் உத்தரகாண்ட் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் விமானப்படை மீட்புப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று மழை ஓய்திருந்ததால் விமானப்படை மீண்டும் மீட்புப்பணியை தொடங்கியது. பகல் 12 மணிக்கு மேல் வானிலை மோசமடைந்தது. அங்கு பணியில் ஈடுபட்ட எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டர் கவுச்சார் என்ற இடத்திலிருந்து குப்தகாசி, கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தது.





2 முறை பத்திரமாக பயணிகளை மீட்டு வந்தது அந்த ஹெலிகாப்டர். 3-வது முறையாக பயணிகளை மீட்டுக் கொண்டு கேதர்நாத்துக்கு திரும்பும் வழியில் கவுரிக்குண்டு என்ற இடம் அருகே வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. மாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.





இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 10 விமானப்படை அதிகாரிகள், 9 இந்தோ திபெத் எல்லைப் படை போலீசார் உள்பட மொத்தம் 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதில் மதுரையை சேர்ந்த விமான "பைலட்" பிரவீண் என்பவரும் பலியானார். அவரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.



மதுரையை சேர்ந்தவர் பிரவீண் (வயது29). இவரது தாய் மஞ்சுளா. இவர் மதுரை ரெயில்வே நிலையத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.





பிரவீன் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. மெகாடிரானிக்ஸ் படித்து முடித்த நிலையில் 2007-ம் ஆண்டு பைலட் பயிற்சியும் பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள ஏர்போர்ட் அகா டமில் பயிற்சி பெற்றுள்ளார். டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிய பிரவீண் அதற்கு பிறகு யு.பி.எஸ். தேர்வு மூலம் விமானப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.



கல்கத்தாவில் உள்ள பெரக்கூரில் உள்ள விமானப்படையில் பைலட்டாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இவரும் ஒரு பைலட்டாக சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டபோதுதான் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.





எனது மகன் பிரவீண் நேற்று காலை 9.40 மணிக்கு என்னுடன் தொலைபேசி மூலம் பேசினான். அப்போது உத்தரகாண்டில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தான். மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அந்த பகுதிக்கு வந்து சென்றதாக தெரிவித்தான். யாத்திரிகர்களை ஏற்றி கொண்டு ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பாக நான் கிளம்பிவிட்டேன் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்தான்.





மேலும் அம்மா இங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறினான். நான் பத்திரமாக சென்று வருமாறு கூறினேன். இந்நிலையில் இன்று காலை விமானப்படை அதிகாரிகள் டெல்லியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு எனது மகன் இறந்துவிட்ட தகவலை தெரிவித்தனர்.





இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.





ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான மதுரை "பைலட்" பிரவீண் உடல் இன்று மாலை மதுரை கொண்டு வரப்படுகிறது. முன்னதாக இன்று காலை விமானப்படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பிரவீணின் தாய் மஞ்சுளாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.





விபத்தில் பலியான பிரவீணுக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் விபத்தில் பலியானது அவரது தாயாரை நிலைகுலைய செய்துவிட்டது.

No comments: