Saturday, December 12, 2015

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
 அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெறுகின்றன.
 சூப்பர் 10 சுற்று: தரவரிசை அடிப்படையில் நேரடித்தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது சூப்பர் 10 சுற்று என அழைக்கப்படுகிறது. இந்தச் சுற்றுக்கு மேலும் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தகுதிபெறும்.
 முதல் சுற்று என அழைக்கப்படும் தகுதிச்சுற்றில் 8 அணிகள் விளையாடுகின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தகுதிச்சுற்று போட்டிகள் மார்ச் 8 முதல் 13 வரை தர்மசாலா, நாகபுரி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
 ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 10 சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் பங்கேற்க தகுதி பெறும்.
 இந்தியா-நியூஸிலாந்து மோதல்: சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டம் மார்ச் 15-ம் தேதி நாகபுரியில் நடைபெறுகிறது. அதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுகின்றன.
 அரையிறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில், அதன் அரையிறுதி ஆட்டம் தில்லியில் நடத்தப்படும். மும்பையில் பாகிஸ்தான் அணிக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அங்கு பாகிஸ்தான் விளையாடுவதைத் தவிர்க்கும் வகையில் மேற்கண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு போட்டி மார்ச் 15-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் இந்தியா, வங்கதேசத்துடனும், நியூஸிலாந்து, இலங்கையுடனும் மோதுகின்றன.
 மகளிர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகள் "ஏ' பிரிவிலும், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை "பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பையிலும், இறுதிப் போட்டி ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகின்றன.
 அனல் பறக்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நடத்துவதற்கு குளுமையான சூழல் தேவை. அது தர்மசாலாவில் கிடைக்கும்.
 -அனுராக் தாக்குர்,
 பிசிசிஐ செயலாளர்.
சென்னையில் மகளிர் போட்டி மட்டுமே! ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் 3 கேலரிகளை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதைக் காரணம் காட்டி சென்னையில் ஆடவர் பிரிவு உலக கோப்பை போட்டி எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மகளிர் பிரிவு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மகளிர் பிரிவிலும் 4 ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி மோதும் ஆட்டம் எதுவும் கிடையாது. இந்தியாவில் பெருவாரியான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றான சென்னைக்கு ஆடவர் பிரிவு போட்டி ஒதுக்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்...
 *ஆடவர், மகளிர் பிரிவினருக்கான இறுதி ஆட்டங்கள் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகின்றன.
 * அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பையில் நடைபெறுகின்றன.
 *கேலரி பிரச்சினையை காரணம் காட்டி சென்னைக்கு ஆடவர் பிரிவு ஆட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. மகளிர் பிரிவில் 4 ஆட்டங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
 * சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டம் மார்ச் 15-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா.
 * பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறும்பட்சத்தில் அந்த அணி மோதும் அரையிறுதி ஆட்டம் பாதுகாப்புக் கருதி தில்லியில்தான் நடத்தப்படும்.
 * பெங்களூரு, மும்பை, சென்னை, நாகபுரி, தில்லி, தர்மசாலா, கொல்கத்தா, மொஹாலி ஆகிய 8 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
 * ஆடவர் பிரிவில் 35 ஆட்டங்கள், மகளிர் பிரிவில் 23 ஆட்டங்கள் என மொத்தம் 58 ஆட்டங்கள் நடக்கின்றன.
 *ஆடவர் பிரிவு போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியே 48 லட்சம் ஆகும். இது 2014-ம் ஆண்டைவிட 86 சதவீதம் அதிகமாகும்.
 *இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
 * மகளிர் உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடியே 67 லட்சம் ஆகும். இது கடந்த முறையைவிட 122 சதவீதம் அதிகமாகும்.
 * முதல் சுற்று என அழைக்கப்படும் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மார்ச் 8 முதல் 13 வரை தர்மசாலா மற்றும் நாகபுரியில் நடைபெறுகின்றன.
 * டி20 உலகக் கோப்பை போட்டி 27 நாட்கள் நடைபெறுகிறது.
 11 நாடுகளுக்கு பயணிக்கும் கோப்பை
 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பை மும்பையில் வெள்ளிக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கோப்பை வரும் 13-ம் தேதி ஸ்காட்லாந்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. 11 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த கோப்பை பிப்ரவரி 1-ம் தேதி தில்லியை வந்தடையும்.
முதல் சுற்று (தகுதிச்சுற்று)
 குரூப் "ஏ'
 வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்.
 குரூப் "பி'
 ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான்.
 சூப்பர் 10 சுற்று
 குரூப்-1
 தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,
 மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தகுதிபெறும் அணி.
 குரூப்-2
 இந்தியா, பாகிஸ்தான்,
 நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தகுதிபெறும் அணி.
 

No comments: