Sunday, December 23, 2012

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

பள்ளிக்கூடத்திற்கு தனியாக சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பெண்களுக்கு தமிழரின் வாழ்விலும், பண்பாட்டிலும் உயர்ந்த இடத்தை அளித்துள்ள தமிழ்நாட்டில் இப்படியொரு கொடூர சம்பவம் நடந்திருப்பது தமிழினத்திற்கு பெரும் தலை குனிவாகும். 

இக்குற்றத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து தண்டனை வழங்குவது முக்கியமாகும். தமிழ்நாட்டில் இப்படியான பாலியல் வன்புணர்ச்சி நிகழ்வுகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நமது தாய் மண்ணில் பெண்கள்தான் எல்லா விதமான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். 

தன்னை காதலிக்க மறுத்த ஒரு படித்த இளம் பெண்ணின் முகத்தின் மீது கட்டிட வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் அமிலத்தை வீசி, அவரது பார்வையையும், முகத்தையும் சிதைத்துள்ளார். சாதி ரீதியான அரசியல் அமைப்புகளும், கட்சிகளும் கூட, தங்களின் சாதிய வெறுப்புணர்வை தாங்கள் எதிர்க்கும் சாதிகளின் பெண்கள் மீதுதான் கொட்டுகின்றன, தாக்குகின்றன. பணியிடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் வன் செயல்கள் அதிகரித்து வருகின்றன. 

தமிழ்ப் பெண்களின் மீதான இப்படிப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் தமிழினத்தின் பண்பாடு மீதான தாக்குதலே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட பாலியல் தாக்குதல்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தனித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: