Sunday, January 1, 2012

காலாண்டரின் வரலாறை தெரிந்து கொள்வோமா?

கிரேக்கர்கள்தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.

கி.மு.700-ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12-வது மாதங்கள்)இருந்தன.

கி.மு.46-ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது. இதில்தான் சாதா ஆண்டு, லீப் ஆண்டு முறையை கொண்டு வந்தார்கள். இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் முறையே கிரிகோரியன் காலண்டர்.

பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.

ஏசு கிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது.

கிரிகோரியன் காலண்டர் கணக்குபடி ஜனவரி 1-ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31-ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752-ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது. டெயில் பீஸ் - ஜூலியன் காலண்டர் வழக்கத்திற்க்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்திருக்கின்றனர்.

1582 -ல் ஏற்பட்ட காலாண்டர் பிரச்சினை

இன்று பிறந்துள்ள 2012-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். பொதுவாக ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் ஆகும். லீப் வருடத்தில் மட்டும் 366 நாட்கள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.

பூமி ஒரு தடவை சூரியனை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு ஆகும். மிகத்துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிட முடியாது. அதனால் 365 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு வருகிறோம்.

மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) நான்கு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிலெடுத்துக் கொண்டு அதை ஒரு நாளாக கணக்கில் கொள்கிறோம். அதைத்தான் லீப் ஆண்டில் சேர்த்துக் கொள்கிறோம். 366 நாட்கள் உள்ளதை லீப் ஆண்டு என்கிறோம்.

இந்த ஆண்டில் வரும் அந்த ஒரு நாளை எதில் சேர்ப்பது? என்ற குழப்பத்திற்கு நானிருக்கிறேன் என்றபடி வரிந்து கட்டிக் கொண்டு பிப்ரவரி இருக்க, அதில் கொண்டு போய் சேர்த்தார்கள். லீப் ஆண்டு வருகையில் பிப்ரவரி மாதம் 29 நாட்களை கொண்டிருக்கும். சரி, இந்த மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) கணக்கில் கொள்ளாமல் விட்டால் அது பல நாட்களை சேர்த்துக் கொண்டு போய் முடியும். அப்புறம் ஆங்கிலப்புத்தாண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கும். அதனால் 1582- அக்டோபரில் ஒரு பிரச்சினையே நிகழ்ந்திருக்கிறது.

கிரிகோரியர் காலத்தில் ஜூலியன் காலாண்டர் முறைப்படி வருடத்திற்கு 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகிப்போனது. இதை சரி செய்ய 1582 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10 நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது. இதன் மூலம் 10 நாட்கள் பிந்தி வருவது சரிசெய்யப்பட்டது. அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதிய முறை கையாளப்பட்டது.

ஆங்கில மாதங்களின் பெயர்க்காரணங்கள்...

ஜனவரி, பிப்ரவரி என வரிந்து கட்டிக் கொண்டு வரும் ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. அவைகளை இங்கே காண்போம்:-

ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தனவாம்.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச். ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் கடவுளின் மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே. ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன். ஜூலை: ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்: ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்: அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்: நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.

No comments: