Tuesday, January 10, 2012

தானே புயல் நிவாரண நிதி திரட்ட நடிகர், நடிகைகள் நட்சத்திர கலைநிகழ்ச்சி: டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்

சினிமா டைரக்டர் பேரரசு அளித்த பேட்டி வருமாறு:-

தானே புயலால் கடலூர், புதுவை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழ், திரையுலகம் ஏற்கனவே ஈழத்தமிழர் பிரச்சினைக்காக போராடி உள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து உள்ளது.

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா சார்ந்த அனைவரையும் வாழவைப்பது தமிழக மக்கள்தான். மூட்டை தூக்கும் தொழிலாளிகள்கூட கூலி பணத்தில் டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து திரையுலகினரை வாழ வைக்கிறார்கள்.

எனவே தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் கடமையாகும். சினிமாவில் பல்வேறு சங்கங்கள் உள்ளன. எல்லோரும் இணைந்து எப்படி உதவலாம் என்று யோசித்து முடிவுகள் எடுக்கவேண்டும்.

நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வசூலாகும் தொகையை முதல்-அமைச்சரின் தானே புயல் நிவாரண நிதிக்கு வழங்கலாம் அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் உதவலாம்.

தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் திரையுலகினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் பேரரசு கூறினார்.

No comments: