Tuesday, February 12, 2013

‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் நாள்தோறும் ஏற்படுகின்றன. அதேபோல், வரலாற்று சிறப்புமிக்க ஒரு புதுமையை அரவிந்த் ராமலிங்கம் இயக்கும் ‘கர்மா’ திரைப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து படைத்திருக்கிறார். 

2000  வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை இன்றளவும் நாம் பயன்படுத்துகிறோம். அதேபோல், ‘கர்மா’ திரைப்படத்தின் ஒரு பாடலுக்காக கவிப்பேரரசு வைரமுத்து கர்மாவை மையப்படுத்தி பத்து குறள்களை இயற்றி இருக்கிறார். 

இதனைப்பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறுகையில், இயக்குனர் அரவிந்த் இராமலிங்கமும், இசையமைப்பாளர் எல்.வி.கணேசனும் என்னை வந்து சந்தித்தார்கள். கர்மா படத்திற்காக ஒரு புது யுக்தியில் எழுத்துக்களை திரையிட இருக்கிறோம். அதற்கு பாடல் வேண்டும் என்று கேட்டிருந்தால் வியந்திருக்க மாட்டேன். திருக்குறளைப்போல ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள்போல ‘கர்மா’வைப் பற்றி குறள் வேண்டும் என்று கேட்டனர். எனக்கு அது பிடித்திருந்தது. 

133 அதிகாரங்களை படைத்தார் வள்ளுவர். அதில் ஊழ்வினை என்ற ஒரு அதிகாரம் உண்டு. அந்த ஊழ்வினையை தொடர்புபடுத்தியும், தொடர்புபடுத்தாமலும் பத்து குறள்களை எழுதி கொடுத்திருக்கிறேன். இந்த பத்து குறள்களையும் என் குரலில் ஒலிப்பதிவு செய்து இருக்கிறார்கள். குறளுக்கு குரல் கொடுக்க வாய்ப்பு தந்த இயக்குநர் அரவிந்த் இராமலிங்கத்திற்கும், எல்.வி.கணேசனுக்கும் நன்றி என்றார். 

மேலும், கவிப்பேரரசு வைரமுத்து கூறுகையில், இந்த குறள்களை எழுதியும், வாசித்தும் ஒலிப்பதிவு செய்தபின் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஈராயிரம் வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் 133 அதிகாரங்களில் முப்பால் படைத்தார். இன்றைக்கு வள்ளுவன் இல்லை. வாழ்வு மாறியிருக்கிறது. காலங்கள் மாறியிருக்கின்றன. இப்பொழுது திருவள்ளுவர் தோன்றி குறள் எழுதினால் என்ன எழுதுவார் என்று யோசித்துப் பார்த்தேன்.

வள்ளுவன் இன்றில்லை. வள்ளுவன் உயரத்திலும் யாரும் இல்லை. ஆனாலும் வள்ளுவர் நவீனமாக திருக்குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று சிந்தனை பிறந்திருக்கிறது. எதிர்காலத்தில் 133 அதிகாரத்தில் நவீன திருக்குறள் நான் எழுதினால் அதற்கு மூலகாரணம் ‘கர்மா’ பட இயக்குனர் அரவிந்த் இராமலிங்கமும், இசையமைப்பாளர் எல்.வி.கணேசனும் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

கிரியேட்டிவ் கிரிமினல் நிறுவனத்தின் தயாரிப்பில் அரவிந்த் இராமலிங்கம் இயங்கி வரும் திரைப்படம் ‘கர்மா’. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். 

No comments: