Tuesday, February 12, 2013

வட இந்தியாவில் பாலாவின் 'ப‌ரதேசி': பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்

பாலாவின் 'பரதேசி' திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வடஇந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வடஇந்தியாவில் வெளியிடுகிறார். 

‘சேது’ படத்தின் மூலம் அறிமுகமான பாலா, 'நந்தா','பிதாமகன்','நான் கடவுள்','அவன் இவன்' படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில்  பாராட்டப்படுபவர். 

இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான 'பரதேசி' தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிர‌காஷ் இசை அமைத்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழிகளில் சப் டைட்டிலோடு தனது பேன்டம் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் அவர் வெளியிடுகிறார். 

அனுராக் காஷ்யப் 'பிளேக் பிரைடே','தேவ் டி' உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமாக 'காங்ஸ் ஆப் வாஸ்யபர்' அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப், பாலாவின் 'பரதேசி' படத்தை வடஇந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: