Monday, February 18, 2013

பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் கலந்துகொள்வதால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பொருளாதார பாதிப்பு மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், வேலை நிறுத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் வேலை நிறுத்தம் செய்வதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளன.



இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.



இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 20, 21 ஆகிய தேதிகளில் தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அதையும் மீறி எடுப்பவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். எனவே, விடுமுறை எடுப்பவர்கள் பற்றிய விவரம் சேகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: