Tuesday, February 19, 2013

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதை விரும்புகிறோம் மும்பையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேச்சு

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதை விரும்புவதாக, மும்பையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.




இந்தியா வந்தார்



இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய கேமரூனை மத்திய மந்திரி சுரேஷ் ஷெட்டி மற்றும் மராட்டிய மாநில உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.கேமரூன் உடன் இங்கிலாந்து முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய 100 பேர் கொண்ட உயர்மட்ட குழு வந்தது.



கலந்துரையாடல்



இதைதொடர்ந்து மும்பையில் உள்ள நுகர்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு டேவிட் கேமரூன் சென்று, அந்நிறுவனத்தின் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.



அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேசியதாவது:–இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உறவு எதிர்காலம் பற்றியது. கடந்த காலம் குறித்தது அல்ல. இந்தியா பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் 2030–ம் ஆண்டில் உலகின் 3–வது பெரிய பொருளாதார சக்தி ஆக உருவெடுக்கும்.



நெருங்கிய கூட்டாளி



என்னை பொறுத்தமட்டில் பொருளாதாரம், இருதரப்பு வர்த்தகத்துக்கு வானம்தான் எல்லை. இது கலாச்சாரம், அரசியல், தூதரக உறவு ஆகியவற்றுக்கும் பொருந்தும். இந்த நூற்றாண்டின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழப்போகும் இந்தியாவுக்கு, நாங்கள் கூட்டாளிகளாக இருப்போம்.இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதை இங்கிலாந்து விரும்புகிறது. இரண்டு நாடுகளுக்கும் வரலாறு, மொழி, கலாச்சாரம் போன்றவற்றில் நிறைய பொதுவான தொடர்புகள் உள்ளன. நீங்கள் (இந்தியா) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாங்கள் (இங்கிலாந்து) உலகின் பழமையான ஜனநாயக நாடு. தீவிரவாதத்திற்கு எதிரான போரட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் அசாதாரணமான சவாலை எதிர்நோக்கி உள்ளன.



ஒப்பந்தங்கள் செய்வோம்



என்னுடன் முன்னணி தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து வந்துள்ளேன். கலாச்சாரம், வர்த்தகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள விரும்புகிறோம்.இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். இது நம்முடைய உறவை வலுப்படுத்துகிறது. என்னுடன் வந்திருக்கும் 100 பேர் குழுவில் இந்திய தொழிலதிபர்களும், இந்திய வம்சாவளி எம்.பி.க்களும் உள்ளனர். இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு ஏற்கனவே வலுவாக இருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்துதான் அதிக முதலீடு செய்து இருக்கிறது. அதுபோன்று ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் பாதி முதலீடு, இங்கிலாந்தில்தான் இருக்கிறது.



மாணவர்களுக்கு வரம்பு இல்லை



இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், நாங்கள் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம். உதாரணத்துக்கு இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பை மற்றும் தொழில்நுட்ப நகரமான பெங்களூரை இணைக்கும் வகையில், 9 மாவட்டங்களை மேம்படுத்த இந்திய, இங்கிலாந்து அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இப்பணியில் இங்கிலாந்து நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடன் பேசுவோம். இதன்மூலம் இந்த நகரங்கள் இடையிலான 1000 கி.மீ தூரப் பகுதிகளின் வாழ்க்கை தரம் உயரும்.இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் இல்லை. அதுபோன்று அவர்கள் அங்கு தங்கி இருப்பதற்கும், பணிபுரிவதற்கும் கால வரம்பு கிடையாது.இந்தியா தன்னுடைய பல்கலைக்கழகங்களில் கூடுதலாக 40 மில்லியன் இடங்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்துக்கு செலவிடும் நிதியை இரட்டிப்பாக முடிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. இந்த பணிகளில் நாங்கள் உதவ விரும்புகிறோம்.இவ்வாறு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.



தொழிலதிபர்களுக்கு ஒரே நாளில் விசா



மும்பை தாஜ் ஓட்டலில் நடைபெற்ற இந்திய தொழிலதிபர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகின் எந்தவொரு நாட்டை காட்டிலும் இந்தியாவில்தான் நாங்கள் பெரிய அளவில் விசா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இங்கிலாந்துக்கு வர விரும்பும் தொழிலதிபர்களுக்கும், அங்கு முதலீடு செய்ய விரும்பும் தொழிலதிபர்களுக்கும் ஒரே நாளில் விசா வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.மேலும், ‘‘இங்கிலாந்து நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க இடையூறாக உள்ள வர்த்தக தடைகளை இந்திய அரசு தொடர்ந்து அகற்ற வேண்டும். இந்திய முதலீடுகளை நாங்கள் வரவேற்பது போன்று, இங்கு (இந்தியா) வங்கி சேவை, சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் இங்கிலாந்து கம்பெனிகள் எளிதில் முதலீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும்’’ என்றும் கேமரூன் குறிப்பிட்டார்.



No comments: