Tuesday, September 1, 2015

சிவாஜி சிலை இடமாற்றம் செய்யப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்


தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிலை இடமாற்றம் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜியின் சிலையை அகற்றக் கோரி கடந்த 2007ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், சிவாஜி சிலையை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக்கு சிவாஜி சிலை இடமாற்றம் செய்யப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் அளித்தது.
இதையடுத்து, சிலையை அகற்றும் பணிகள் எப்போது தொடங்கும் என நீதிபதிகள் கேட்டதற்கு, மணிமண்டபம்  கட்டப்பட்டவுடன் சிலை இடமாற்றம் செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
அதுவரை சிலையின் நிலை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்ப, இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதால், 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.


No comments: