Friday, June 24, 2011

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால் போராட்டம்; சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இதுவரை 550-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்ரவதை செய்த சிங்களப்படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித் தனத்தையும் ஆரம்பித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க் கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த சிங்கள கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிக கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டு மல்லாமல் சிந்தாதுரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக் காளை, ராமகிருஷ்ணன், ராமசாமி உள்பட 23 மீனவர்களை சிறைபிடித்துச் சென்று, மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளனர்.

இந்த அட்டூழியத்தை இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித்தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன் படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத்தூதரை உடனடியாக கொழும்பு அனுப்பி சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ராமேசுவரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புகளுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: