Wednesday, June 15, 2011

தலைவன் ஆகிறார் சசிகலா அக்கா மகன்

"தலைவன்' என்ற பெயரில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் சசிகலா அக்கா மகன் பாஸ்கரன். பாஸ் என நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர் அதே பெயரை சினிமாவில் பயன்படுத்த இருக்கிறார். "ஜதி', "ஆக்ரா' ஆகிய படங்களை தயாரித்த புளு ஓசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சினிமா பிரவேசம் குறித்து பாஸ்கரனிடம் பேசிய போது, ""சிறு வயது முதலே சினிமா ஆசை இருந்தது. இதற்காக நான் இரண்டு வருடங்களுக்கு முன்பிலிருந்தே என்னை தயார்ப்படுத்தி வருகிறேன்.

சினிமா பற்றி பல விஷயங்கள் படித்திருக்கிறேன். நல்ல சினிமா பற்றி நண்பர்களிடம் நிறைய பேசுவேன். எம்.ஜி.ஆரின் சினிமாக்கள் அதிகம் பார்த்து வளர்ந்தவன் நான். கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடிக்கும் முடிவில் இருந்தேன். அதைத் தொடர்ந்து நிறைய கதைகளை கேட்டேன். எதுவும் பிடிக்கவில்லை. இப்போது ஒரு கதை முடிவாகி உள்ளது. கதை குறித்தும் இயக்குநர் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். படத்துக்கு "தலைவன்' என்ற பெயரை சூட்டியுள்ளோம். ஆக்ஷன், காதல் கலந்த இக்கதைக்காக என்னை நான் இப்போது தயார்ப்படுத்தி வருகிறேன். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்'' என்றார் பாஸ்கரன்.

No comments: