Saturday, January 23, 2016

சீவலப்பேரி பாண்டி-2வில் கார்த்திக்?

1994-ல் பிரதாப்போத்தன் இயக்கத்தில் நெப்போலியன் நடித்த படம் 'சீவலப்பேரி பாண்டி'. நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த சீவலப்பேரி என்ற ஊரில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவானது. நெப்போலியனுக்கு அப்படம் திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் ராஜேஷ்வர். இவர்தான் கார்த்திக்கை வைத்து அமரன் என்ற படத்தை இயக்கியவர், அந்த படமும் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில், அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கார்த்திக்கை வைத்து இயக்கப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டார் ராஜேஷ்வர். ஆனால் அந்த படம் இப்போதுவரை தொடங்கப்படவில்லை. இதையடுத்து விசாரித்தபோது, அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தள்ளி வைத்து விட்டு, தான் கதை எழுதிய சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கும் முயற்சியில் ராஜேஷ்வர் இறங்கியிருப்பதாக தெரிய வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த நெப்போலியனுக்கு பதிலாக நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறாராம்.
மேலும், சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை கெளதம்மேனன் இயக்க, கமல்ஹாசன் நாயகனாக நடிக்கயிருப்பதாகவும் கடந்த ஆண்டில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அதுபற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இப்போது மறுபடியும் கார்த்திக் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Karthik Fans

No comments: