Saturday, January 9, 2016

அளவிட முடியாத மகிழ்ச்சி: நடிகர் சூரி அறிக்கை

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமும் நடக்காமல் போய்விடுமோ பரிதவித்தவர்களில் நானும் ஒருவன். ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்மீது நான் கொண்டிருந்த நேசம் அளவிட முடியாதது.
ஆனால், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியாமல் போனது என்னைப் போன்றவர்களுக்கு தாங்க முடியாத வேதனையை உண்டாக்கியது. தமிழ் மக்களின் வீர விளையாட்டு இந்த வருடமும் நடக்காமல் போனால், நமது பாரம்பரியப் பெருமையும் சிறப்பும் மீட்க முடியாத அளவுக்குப் போய்விடுமே என தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வேதனையின் விளிம்பில் இருந்தனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் போராட்டத்தாலும் தமிழ் மக்களின் இடைவிடாத கோரிக்கையாளும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு. மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி மாடுகள் தனி எனப் பிரிக்க முடியாது. இத்தகைய அன்புக்கும் வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக் கட்டு நிகழ்வு இந்தவருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: