Sunday, August 4, 2013

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம்: சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி நடக்கிறது


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருமணம் சென்னையில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை அவர் மணக்கிறார். திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரணையூர் ஆகும். செந்தமிழன் - அன்னம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த சீமானுக்கு, 2 சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்து-மனோகரி தம்பதியின் மகள் கயல்விழியை மணக்கிறார். மணமகள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவர்களது திருமணம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செப்டம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சமூக சிந்தனையில் சீமான்-கயல்விழி ஆகியோரின் பார்வை ஒன்று என்ற வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு விழாவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். இந்த நிலையில்தான், இருவீட்டாரும் கலந்துபேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளனர். சீமான் - கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி நடத்திவைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர். விழாவில், அரசியல் பிரமுகர்களும், திரை உலகத்தினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

No comments: