Monday, August 19, 2013

ராஜீவ் காந்தி நாயகன், பிரபாகரன் வில்லன்: மெட்ராஸ் கபே படத்தில் சர்ச்சை காட்சிக


ஜான் ஆபிரகாம் நடித்துள்ள மெட்ராஸ் கபே இந்திப்படம் வருகிற 23–ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இதில் காட்சிகள் இருப்பதாக தமிழ் அமைப்புகள் எதிர்த்தன. இதையடுத்து அந்த அமைப்புகளுக்கு சென்னையில் நேற்று இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பாஸ்கரன் என்ற பெயரில் சித்தரித்து உள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி ஏற்படுத்த இந்தியா அமைதிப்படை அனுப்பி வைக்கிறது. இந்தியா 'ரா' அதிகாரி ஜான் ஆபிரகாமும், கேரளாவில் இருந்து அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்தி அழிக்க முயற்சிக்கின்றனர். ஜான் ஆபிரகாமும் அழிப்பு வேலையில் ஈடுபடுகிறார். அப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் தரப்பில் வியூகம் அமைக்கப்படுகிறது. இது இந்திய அரசுக்கு தெரிந்தும் பாதுகாப்பு அளிக்க மறுத்து தமிழக அரசுக்கு தகவல் சொல்கிறது. ராஜீவை காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன. அதையும் மீறி அவர் கொல்லப்படுவது போல் கதை முடிகிறது. இதில் சிங்கள ராணுவ படுகொலைகள் எதுவும் காட்டப்படவில்லை என்றும், விடுதலைபுலிகளையும், ஈழத்தமிழர்களையும் வில்லனாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளனர் என்றும் படம் பார்த்த ஆர்.கே.செல்வமணி குற்றம்சாட்டினார்.

No comments: