Thursday, August 15, 2013

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மனைவி - மகள் தொடர்பான ஆவணங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் ஆட்சியை விரட்ட வேண்டும் என்று போராடிய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசை கைது செய்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்தது. 

1941ம் ஆண்டு விட்டுக் காவலில் இருந்து தப்பியோடிய அவர் ஜப்பானின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டார். 

18-8-1945 அன்று தைவான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் இந்த கருத்தில் பலருக்கு உடன்பாடில்லை. 

சுதந்திர இந்தியாவின் விடை காண முடியாத மர்மமான நேதாஜியின் மறைவு இன்று வரை விடை காண முடியாத கேள்வியாகவே நீடித்து வருகிறது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் நேதாஜி தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். 

அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், நேதாஜி தொடர்பாக தங்களிடம் 33 ரகசிய கோப்புகள் உள்ளதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வரும் சந்திரசூர் கோஸ் என்பவர், நேதாஜியின் மனைவி எமிலி மற்றும் அவரது மகள் அனிதா போஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களின் பிரதியை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 'மனுதாரர் கேட்டிருக்கும் விபரங்கள் அரசின் ரகசிய கோப்புகளின் ஒரு பகுதியாக உள்ளன. அவற்றை வெளிப்படையாக அறிவித்தால் பிற நாடுகளுடனான இந்திய அரசின் உறவுகள் பாதிக்கப்படலாம். எனவே, அவற்றை மனுதாரருக்கு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.

No comments: