Thursday, November 14, 2013

முள்ளிவாய்க்கால் விழா விதிமீறல்: நடராஜன் முன்ஜாமின் மனு

தஞ்சாவூர் அருகே, "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' துவக்க விழாவில் விதிமீறல் தொடர்பான வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், முன்ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக, உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா நவ., 8 முதல் 10 வரை நடந்தது. இதற்கு தடைகோரிய, அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. விழாவில், இரவு 10 மணிவரை ஒலிபெருக்கி பயன்படுத்த, போலீசார் அனுமதித்தனர். இதை மீறி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக, நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சாமிநாதன் உட்பட சிலர் மீது தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை ஐகோர்ட் கிளையில், முன்ஜாமின் கோரி நடராஜன் தாக்கல் செய்த மனு: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை சார்பில்தான், விழா நடந்தது. நான், சிறப்பு விருந்தினராகத்தான் பங்கேற்றேன். தனிநபர் மற்றும் அரசுக்கு எதிராக விழா நடக்கவில்லை. நான், சட்டத்தை மதித்து நடப்பவன். போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. முன்ஜாமின் வழங்கி, உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதேபோல், சாமிநாதனும் மனு தாக்கல் செய்துள்ளார். மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வருகின்றன.

No comments: