Thursday, January 22, 2015

மதுரைக்காரர் ஒருவரின் குமுறல்கள் :

நான் மதுரைக்காரன் என்ற முறையில், சினிமா துறையினரிடம் சில கேள்விகள் கேட்க விளைகிறேன்...
தமிழ் பண்பாட்டு அடையாளம் சார்ந்த ஜல்லிக்கட்டுக்கு நேர்ந்து இருக்கும் துயரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? விவசாய மண்ணில் வாழ்ந்து, பொங்கலைக் கூட கொண்டாடாமல், துக்க நாளாக அனுசரித்து, கறுப்புக் கொடியேற்றி, நாங்கள் போராட்டம் நடத்துவது பற்றி தெரியுமா?
'நானும் மதுரைக்காரன் தாண்டா' என, வசனம் பேசிய நடிகர்கள் மற்றும் 'மண் சார்ந்த அடையாளம் தான் எங்களின் வெற்றிக்கு காரணம்' என, பேட்டி தந்த இயக்குனர்கள் உள்ளிட்ட அனைத்து சினிமா கலைஞர்களிடம் இருந்து, ஏன் ஜல்லிக்கட்டு குறித்து, ஒரு அறிக்கை கூட வரவில்லை?
மண் சார்ந்த அடையாளங்களுக்கு, ஒரு பிரச்னை எனும்போது, அதற்கு எதிராக, பொது தளத்தில் தன் குரலை பதிவு செய்பவனே கலைஞன்; அவனுக்கு மட்டுமே, மண் சார்ந்த படைப்புகளை படைக்கும் தகுதி இருக்கிறது.நீங்கள், ஒன்றாகத் திரண்டு போராட்டம் நடத்த வேண்டாம்; ஒரு அறிக்கை அல்லது போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவேணும் தெரிவித்து இருக்கலாமே!
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகக் கூட, நாங்கள் அமைதியாகத் தான் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்; ஆனால், மதுரை மக்கள் எப்போதுமே அரிவாளும் கையுமாக திரிகின்றனர் என்ற போலியான தோற்றத்தை, தமிழகம் முழுக்க பரப்பிய புண்ணியம் உங்களைத் தானே சேரும்! உங்களை, யாருக்கும் எதிராக குரல் கொடுக்கச் சொல்லவில்லை; மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று சொல்வதற்கு கூட, ஏன் இத்தனை தயக்கம்? உங்களில் சிலருக்கு, அரசியல் ஆசையெல்லாம் இருக்கிறது; நீங்கள் எங்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை சீக்கிரம் தீர்ந்து இருக்கலாம். 'சினிமாவை வெறும் சினிமாவாகத் தான் பார்க்க வேண்டும்; சினிமா நடிகர்கள் ஏன் சமூகம் பற்றிச் சிந்திக்க வேண்டும்?' என்று, சில அறிவாளிகள் கேட்பர். தமிழ் மக்கள், சினிமாவை வெறும் பொழுதுபோக்கு காரணியாக பார்த்து இருந்தால், எந்த நடிகருமே இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டீர்கள்; சினிமாவின் கல்லாபெட்டி நிரம்பி
வழிந்திருக்காது. நியாயமாக பார்த்தால், தினசரி பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் பேருந்து, ரயில் ஓட்டுனர்களுக்கு தான் ரசிகர் மன்றங்கள் திறந்து இருக்க வேண்டும்; தேசத்தை அன்றாடம் சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களின் கட் - அவுட்களுக்கு தான், மாலையும் மரியாதையும் செய்து இருக்க வேண்டும். ஆனால், அப்பாவி ஏழை தமிழ் மக்கள், இவை அனைத்தையும் திரைத்துறையினருக்கு மட்டுமே செய்கின்றனர் என்பது வேதனை. சமூக ஆர்வலர்கள் எத்தனையோ பேர் எழுதியும், சொல்லியும் கூட, அவர்கள் திரைத்துறையினரை நம்புகின்றனர்.
அவர்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு, நீங்கள் என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள்?
தமிழர் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள, நாங்கள் நடத்தும் போராட்டம், வலி நிறைந்தது.
பண்பாட்டு கலாசார அடையாளம் சார்ந்து, ஒரு சிக்கல் எழும்போது, வாய் மூடி மவுன அஞ்சலி செலுத்தும் சினிமா கலைஞர்களே, மண் சார்ந்த படைப்புகளை இனி எடுக்காதீர்கள்.
மண் சார்ந்து நீங்கள் பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும், படைப்பிற்கும் விழுந்த கைதட்டல்கள், எங்களின் அடிமனதில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டது; உங்களை பொறுத்தவரை, அவை வெறும் வசனங்களே என்பதை, நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள்.

No comments: