Tuesday, March 13, 2012

குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்

தமிழக நகரங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கிராமப்புற குழந்தைகளை விட மோசமான நிலையில் உள்ளதாக, ஐ.நா.,வின் அங்கமான, "யூனிசெப்'பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் சார்பில், உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை, சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள்:
* ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, நகரங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவே, கிராமப்புறங்களில், 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
* தமிழகத்தில், 48 சதவீத குழந்தைகள் நகரங்களில் வாழ்கின்றனர்.
* இந்தியாவில், 50 ஆயிரம் பகுதிகளில் குடிசைகள் நிறைந்துள்ளன. இதில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 35 சதவீதமும், ஆந்திராவில் 11 சதவீதம், மேற்குவங்கத்தில் 10 சதவீதம், தமிழகம் மற்றும் குஜராத்தில் 7 சதவீதம் குடிசைப் பகுதிகள் உள்ளன.
* இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், சென்னை நான்காம் இடம் வகிக்கிறது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி, சென்னையில் நான்கில் ஒரு பங்கினர், குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சென்னையில், 12 லட்சம் மக்கள் குடிசையில் வாழ்கின்றனர்.
* கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளை விட, நகர குழந்தைகளின் நிலை வறுமை காரணமாக மோசமாக உள்ளது. பள்ளிகள், மருத்துவமனை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கு அருகில், குடிசைப் பகுதி குழந்தைகள் வாழ்ந்தாலும், வறுமை மற்றும் பாகுபாடான தன்மையால், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
* கிராமத்து தாய்களை விட, நகரத்து பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கியுள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை அதிகம் விரும்புவதில்லை.
* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: