Saturday, October 27, 2012

எங்கள் தொகுதி மக்களுக்காகவே முதல்-அமைச்சரை சந்தித்தோம் -அருண்பாண்டியன் பேட்டி

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன் இருவரும் வெளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம் வருமாறு:- 

கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து பேசியதன் நோக்கம் என்ன?

அருண்பாண்டியன்:- எங்களை தேர்ந்து எடுத்து 1 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு  கண்டிப்பாக துரோகம் செய்யக் கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை. 

அம்மா அவர்களை நேரடியாக பார்த்து எங்களது தொகுதி பிரச்சினைகளை கூறினோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்கள் தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. இந்த மாதிரி நிறைய பிரச்சினைகள் உள்ளது. தொகுதியில் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களது பிரச்சினை எனக்கு நன்றாக தெரியும். 

அந்த ஊருக்கு அதிகமாக நான் செல்லவில்லை. ஆனால் மொத்த தொகுதியையும் டிஜிட்டலை சேசன் செய்து என் கையில் வைத்துள்ளேன். ஒரு ஊசி நூலில் இருந்து மலை வரைக்கும் தொகுதி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய உள்ளது. 

முதல்-அமைச்சர் அம்மா அவர்கள் நிறைய திட்டங்கள் வைத்துள்ளார்கள். அந்த திட்டங்கள் எங்கள் தொகுதி மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும். இப்போதைக்கு பேராவூரணி தொகுதி மேம்பாடு தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் அம்மாவை பார்க்க வந்தோம். அம்மா செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு வந்து சேர வேண்டும். 

இந்த ஒரே காரணத்துக்காகத்தான் அம்மாவை நேரடியாக பார்த்து மனுவை கொடுத்துள்ளோம். 

அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் இருவரும் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தபோது, அவர்களது காரில் வழக்கமாக பறக்கும் தே.மு.தி.க. கொடி இல்லை. காரில் பொருத்தப்பட்டிருந்த அந்த கொடிகள் அகற்றப்பட்டிருந்தது.

No comments: