Monday, October 29, 2012

அகமுடையார் சமுதாயத்தினர் திடீர் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் காவல் துறையைக் கண்டித்து அகமுடையார் சமுதாயத்தினர் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 ராமேசுவரம், வாலாந்தரவை, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த அகமுடையார் சங்கத்தினர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் செல்வதற்காக ராமநாதபுரம் பாரதி நகரில் 8 வேன்கள், 30 கார்களில் தயார் நிலையில் இருந்தனர்.
 அவர்கள் மத்தியில் அகமுடையார் சங்க மாவட்டத் தலைவர் பாம்பன் என்.ராஜாஜி பேசுகையில், தங்களுக்கு டிஜிட்டல் விளம்பரப் பலகை வைக்க காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவது ஏன்? என்று புரியவில்லை. இதற்காக காவல் துறையைக் கண்டிக்கிறோம் என்று கூறி அவரது தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 அப்போது அச்சமுதாய இளைஞர்கள் பலர் திடீரென பாரதி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 பின்னர் சங்க நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அய்யனார், மருதுபாண்டியர் அறக்கட்டளைத் தலைவர் வீராச்சாமி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் இளைஞர்களை சமாதானம் செய்து அஞ்சலி செலுத்தச் சென்றனர்.

No comments: