Tuesday, October 30, 2012

கனடா தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி: இளையராஜா இசை நிகழ்ச்சி ரத்து?

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். 

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வந்தன. இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நவம்பர் மாதத்தை விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாக ஈழத்தமிழர்கள் கடைபிடிப்பதால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து இசை நிகழ்ச்சி ரத்தாகும் என தெரிகிறது. 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். 

இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பிவிட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது. 

இந்நிலையில் இன்று சென்னையில் என்னை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள். 

இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு. எனவே இசை நிகழ்ச்சி வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டால் மகிழ்ந்து கைகோர்ப்போம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: