Saturday, May 18, 2013

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள்: கடலூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு தடை

கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.




இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள மஞ்சை நகர் திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படங்களுடன் சீமான் படங்களும் அச்சிடப்பட்டு, பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.



தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர் படத்துடன் போஸ்டர்கள் ஒட்ட ஏற்கெனவே அரசாணை உள்ள நிலையில், இது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படங்களை நாம் தமிழர் கட்சியினர் நீக்கவில்லை. எனவே, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிப்பதாக மாவட்ட எஸ்பி ராதிகா அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திலீபன் வீட்டுக்குச் சென்று போலீஸார் இன்று அதிகாலை 3 மணி அளவில் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவர் வீட்டின் கதவில் இந்த அறிவிப்பை ஒட்டிவிட்டு வந்தனர்.

.

போலீஸார் தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்


நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கடலூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், இன்று தடையை மீறி நாங்கள் பொதுக்கூட்டத்தை நடத்துவோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.




நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.



இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,



கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டிமிட்டிருந்தோம். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டோம். இந்நிலையில் இன்று காலை திடீரென்று கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.



பொலீஸார் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் போலீஸார் இன்று அனுமதி மறுத்துள்ளனர். எனவே, நாங்கள் நீதிமன்றம் சொன்ன படி, போலீஸார் தடையை மீறி இன்று பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments: