Wednesday, December 25, 2013

ஜல்லிக்கட்டு விழாவை தேசிய வீரவிளையாட்டாக அறிவிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பாலமேடு வாடி வாசல் திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:– தமிழகத்தில் எப்போது தடையில்லா மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. கச்சத்தீவை மீட்போம் என்று சொன்னவர்கள் இதுவரை மீட்கவில்லை. கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் போதை பாக்குகள் விற்கக் கூடாது என்று அரசு தடைவிதித்தது. ஆனால் கடைகளில் மறைமுகமாக விற்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிராமங்கள் தோறும், பாதிக்கப்பட்டு மந்த நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மதுபான கடைகளில் ஏராளமான இளைஞர்கள் குடித்து குடித்து மூளை மழுங்கிபோய் சுயநினைவற்று சாலை ஒரங்களில் சாய்ந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் கல்லணையை கட்டி முடித்தார் கரிகாலசோழன், இதனால் தமிழகம் பாசன வசதி பெற்று விவசாயம் வளம் பெற்றது. தமிழ் மண்ணில் தவழும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டாமல் நாகரிகத்திற்காக ஆங்கில பெயர்களை கிஷ், புஷ் என்று சூட்டுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? இந்த மண்ணின் மக்களின் உரிமைக்காக போராடுவோம். ஏறுதழுவுதல் நமது இனத்தின் அடையாளம். ஜல்லிக்கட்டு விழாவை தென்னகத்தின் தேசிய வீர விளையாட்டாக அறிவிக்க வேண்டும். எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை வேண்டும். இலவசங்கள் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.

No comments: