Monday, April 18, 2016

உசிலம்பட்டியில் நடிகர் கார்த்திக் போட்டி மேலும் சில கட்சிகள் இணைகின்றன

சென்னை : கார்த்திக் தலைமையிலான விடியல் கூட்டணியில் நடிகர் கார்த்திக் உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனது.

இந்நிலையில், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் 6 சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து விடியல் கூட்டணி என்ற புதிய அணியை நேற்று முன்தினம் அதிரடியாக உருவாக்கினார். அந்த புதிய அணியில் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


மேலும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், புதிய பாரதம் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த கட்சிகளும் விடியல் கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதியிலும் விடியல் கூட்டணி மூலம் வேட்பாளர்களை களம் இறக்க கார்த்திக் முடிவு செய்துள்ளார். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகர் கார்த்திக், உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

No comments: