Thursday, May 5, 2011

சமையல் கியாஸ் விலை 25 ரூபாய் உயர்கிறது; டீசல் விலை ரூ.5 வரை அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைவிலை அதிகரித்தப்படி உள்ளதால் இந்தியாவில் பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு பெட்ரோல், விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு உயர்த்தப்படவில்லை.
இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8.50 நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.16.76 இழப்பு ஏற்படுகிறது. சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.330 இழப்பு உண்டாகிறது. மொத்தத்தில் 2010-11ம் ஆண்டில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

5 மாநில தேர்தல் பிரசாரம் அடுத்த வாரம் புதன் கிழமை (11-ந் தேதி) முடிகிறது. எனவே அன்று பெட்ரோலியம் விலைகளை உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 5 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. பெட்ரோல் விலை 3 அல்லது 4 ரூபாய் வரை உயரும் என்று தெரியவந்துள்ளது. டீசல் விலை 5 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பெட்ரோலியம் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மண்எண்ணை விற்பனையில் லிட்டருக்கு ரூ.30 வரை இழப்பு ஏற்படுகிறது என்றாலும் மண்எண்ணை விலை உயர்த்தப்படாது என்று தெரியவந்துள்ளது.

No comments: