Friday, May 6, 2011

கனிமொழியின் என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை

புதுடெல்லி; ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் சலுகைகள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கனிமொழியின் என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கு லட்சக் கணக்கான ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மத்திய பொதுநல அமைப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் இந்த அதர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த நன்கொடைகள் கனிமொழியின் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.
ஸ்பெக்டரம் ஒதுக்கீடானது ஜனவரி 10ம் தேதி நடைபெற்றுள்ளது. அதற்கு பிரதி உபகாரமாக அந்த தேதிக்கு முன்பே அதாவது ஜனவரி 5-ம் தேதியன்று யுனிடெக் தொலைத் தொடர்பு நிறுவனமானது ரூ.50 லட்சத்தை தன்னார்வ தொண்டுநிறுவனத்துக்கு அளித்துள்ளது. அதே தேதியில் டாடா டெலி சர்வீஸ் நிறுவனமும் ரூ.25 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிட்டெட் ஜனவரி 7-ம் தேதியன்று ரூ.25 லட்சம், ஷாம் டெலிகாம் லிமிடெட் ரூ.10 லட்சம், ஈடிஏ ஸ்டார் பிராப்பர்டி மேனேஜ்மெண்ட் ரூ. 10 லட்சமும் நன்கொடையாக கொடுத்துள்ளன.
இவையெல்லாம் அந்த ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளன.
புதிய ஆவணத்தின் காரணமாக கனிமொழிக்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: