Tuesday, May 3, 2011

ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே மறுப்பு

ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே மறுத்துள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது ஆயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். எனவே இலங்கை அரசு போர் குற்றம் இழைத்ததாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டின.

இதை தொடர்ந்து ஐ.நா.சபை 3 பேரை நியமித்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளி என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவித்தார். இதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்தது. அதை ஏற்க முடியாது என்றும் கூறி வந்தது.

இந்த நிலையில் நேற்று கொழும்புவில் மே தின பேரணி நடந்தது. அதில், அதிபர் மகிந்த ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில், அதிபர் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இறுதி கட்ட போரின் போது, விடுதலைபுலிகளால் துப்பாக்கி முனையில் மனித கேடயமாக பிடித்து வைத்திருந்த 3 லட்சம் மக்களை காப்பாற்றினோம். பசியால் வாடிய அவர்களுக்கு உணவு வழங்கினோம். தீவிரவாதத்தின் பிடியில் இருந்த மக்களை மீட்டோம். போரின் போது இரு தரப்பிலும்தான் குற்றங்கள் நடந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் மீது போர் குற்றம் சுமத்தப்படவில்லை.முன்பெல்லாம் குழந்தைகள் தீவிரவாத பாதையில் ஈடு படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். கிரிக்கெட் விளையாடுகின்றனர். இவையெல்லாம் மனித உரிமை மீறலா? குற்றமா? எந்த சூழ்நிலையிலும் இலங்கை வெளிநாடுகளின் நிர்பந்தத்துக்கு அடிபணியாது. எனவே, ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க முடியாது.

இவ்வாறு அதிபர் ராஜபக்சே பேசினார்.

No comments: