Tuesday, May 3, 2011

26 நாட்கள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயிலை சமாளிக்க யோசனைகள்

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 29-ந்தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலமாகும். அதிலும் ஏப்ரல் முதல் மே இறுதிவரை வெயிலின் தன்மை கடுமையாக இருக்கும்.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் கோடை காலம் முடிந்த பிறகும் 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. இந்த ஆண்டு கோடை தொடங்கி 1 மாதம் தாண்டிவிட்டது.

சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திரம் கோடை மழை ஆங்காங்கே பெய்த போதிலும் சென்னையில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை ( 4-ந்தேதி) தொடங்குகிறது. நாளை தொடங்கும் அக்னி வெயில் 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பொது மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெயிலில் அலைவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்ப்பதன் மூலம் கோடை கால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நோய்கள் கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும்,

மேலும் வியர் குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க குறைந்தது ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம். இளநீர் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

நொங்கு பதனீர் போன்றவையும் சாப்பிடலாம். இவை உடல் சூட்டை தணிக்கும். ஆடைகள் கோடை காலத்தில் ஆடைகளை அணிவது நல்லது. வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் பருத்தி ஆடை உடலுக்கு இதமாக இருக்கும்.

மேலும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல் தளர்வாக அணிவது நல்லது. அடர்த்தி யான நிறம் கொண்ட ஆடைகளை பயன்படுத் துவதை குறைத்து கொள்ளுங்கள். வெயிலில் செல்லும் போது குடைபிடித்து செல்வது நல்லது. பகலில் வெயிலில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொப்பி அணிந்து செல்வது நல்லது.

நடந்து செல்பவர்கள் குடை பிடித்து செல்லவேண்டும். அல்லது தலையில் கைக்குட்டையால் மூடலாம். முடிந்த அளவு அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிடும்போது உணவை ஆறவைத்து சாப்பிட வேண்டும்.சாப்பாட்டில் காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்று உபாதை ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயனிக்கும் 15 நாட்கள் அதாவது சித்திரை மாதத்தின் கடைசி வாரமும், வைகாசி மாதத்தின் முதல் வாரமும் மிக அதிக வெப்ப நாட்கள் என்று வானியல் வல்லுனர்கள் கணித்து அதற்கு கத்தரி என்று அழைத்தார்கள்.

கத்திரியில் சில விசேஷங்களை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.

கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை: திருமணம், நிச்சயம், பெண்- மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்த வையாகும்.

கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:

மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட தொடக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது (பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது.

விஞ்ஞானரீதியாக பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபகுதி 6 மாதங்களும் அடுத்து தென்பகுதி 6 மாதங்களும் சூரியனின் ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின் ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின் முக்கிய காரணியாகும். இதில் சூரியனின் கதிர் நேர்கோணத் தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும். இதனால்தான் அக்னி வெயில் மண்டையை பிளப்பது போல் உள்ளது. இத்தகைய கத்திரி வடபகுதியில் உள்ள இந்தியா மட்டும் அல்ல பூமத்திரேகை கீழ் தென் பகுதியில் உள்ள நாடுக ளுக்கும் ஏற்படும்.

தென் பகுதியில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வட பகுதிக்கு நேர் எதிரான காலத்தில் அது இந்தியாவில் குளிர் காலம் எனில் ஆஸ்திரேலியாவில் கத்திரி மிகவெப்ப காலம் ஆகும். சிவன் கோவில்களில்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்ப்பகிரகத்தில் சிவலிங் கத்தின் மீது தாரா பாத்திரம் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங் கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னி நட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தணிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம். மேலும் சிவலிங்கம் 3 பிரிவுகளால் ஆனதாகும்.

இவை அனைத்தும் சாந்து கொண்டு பிணைக்கப்பட்டு இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சாந்து காய்ந்து சிவலிங்கம் ஆவுடையாரில் இருந்து பிரிவதை தடுப் பதற்கும் தார் பாத்திரத்தில் இருந்து விழும் நீர் உதவுகிறது. கோடையில் எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?

கோடையில் எவ்வளவு குடிநீர் அருந்தலாம் என்பது பற்றி டாக்டர் சகுந்தலா கூறியதாவது:-

கோடையில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். நமது உடல் 60 சதவீத நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.

சிறுநீர், வேர்வை, சுவாசம், மலம் மூலமாக உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன. 12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1? லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர்.

இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 3 1/2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த சட்சம் 4 லிட்டர் நீரும் பெண்கள் 3? லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லு நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம்.

அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற்சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்தில் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக நீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.

தர்பூசணி, வெள்ளரிக் காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.

கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்: உடல் எடை, சத்து குறையும், சோர்வு ஏற்படும், மயக்கம், தலைவலி உண்டாகும். சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், நிறுநீரங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள் ஏற்படும்.

இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திரகாலத்தில் அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் டாக்டர் சகுந்தலா.

No comments: