Monday, July 1, 2013

விடுதலை புலிகள் அமைப்புக்கு தடை : எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி

விடுதலை புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மற்றும் வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.




இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடை நீட்டிப்பு சரிதானா என்பது குறித்து ஆராய்வதற்காக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.



தில்லி, சென்னை, ஊட்டி உட்பட பல்வேறு இயக்கங்களில் அந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியாக தடை நீட்டிக்கப்பட்டது சரியே என்று கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.



தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்குரைஞர் புகழேந்தி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.



இந்த வழக்கு ஓராண்டுக்கு முன்பே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கில் நீதிபதி எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.



அதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியே என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறி வைகோ மற்றும் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

.

No comments: