Monday, July 1, 2013

விஷமதனத்தை புரிந்துகொள்ள வேண்டும்”:’அன்னக்கொடி’ பட விவகாரம் குறித்து பாரதிராஜா அறிக்கை

பாரதிராஜா இயக்கத்தில் தேனியை சேர்ந்த புதுமுக நடிகர் லஷ்மண், நடிகை கார்த்திகா ஆகியோர் நடித்த ‘அன்னக்கொடி’ என்ற திரைப்படம் கடந்த 28ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. அன்னக்கொடி’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறி அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்துக்கு தடை விதிக்கக் கோரி வரும் அவர்கள் தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.




இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.



நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம். “ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்” என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே “கோவலனை கொண்டு வா” என்ற வார்த்தையை தவறாக கொண்டு, ” கொன்று வா” என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு. எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோலிவை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும்.



நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் “அன்னக்கொடி” திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் “அன்னக்கொடி” படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.



சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.

.

No comments: