Monday, February 13, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சசிகலா பேரவை

சசிகலா பெயரில் பேரவை அமைக்கவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் முடிவு செய்திருப்பதாக, மாமன்னர் பூலித்தேவர் பாசறை மாநிலப் பொதுச்செயலர் ராஜாமறவன் கூறினார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: சசிகலா பேரவை அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் அடுத்த வாரம் தென்காசியில் அதன் தொடக்க விழா நடைபெறுகிறது.

இதையடுத்து, சசிகலா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சங்கரன்கோவிலில் எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் அங்கு வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு, சசிகலா அங்கு 5 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்தபோது சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு 1991, 2001 தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொண்டார்.

2011 தேர்தலில் அனைத்து சமுதாயத் தலைவர்களையும், ஒரே கூட்டணியின் கீழ் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறவும் அவர்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் என்றார் அவர்.

No comments: