Monday, February 27, 2012

நாளை பொது வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடுமா?

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) பொது வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என தெரிகிறது.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர் நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகள் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன என்று கூறி, வரும் பிப்ரவரி 28-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

காங்கிரஸ் கட்சி சார்புள்ள ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., திமுகவின் தொ.மு.ச. பேரவை, பி.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

வங்கிப் பணிகள் பாதிக்கும்: வங்கித்துறையில் 7 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறினார். 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெளிப்பணி ஒப்படைப்பு, கண்டேல்வால் குழுவின் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்தப் பொது வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கெüரவத் தலைவர் ஏ.எம்.கோபு கூறியதாவது:

உலக வர்த்தகப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் எனக் கருதி, பொருள்களை குறைந்த அடக்க விலையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் 5 கோடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, தொழிலாளர் நலன் காக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் மாநிலத்தில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படும். பெரும்பாலான ஆட்டோ, பஸ்கள் ஓடாது என்றார் கோபு.

No comments: