Monday, February 27, 2012

மணிரத்னத்திற்கு நான் வில்லன் அல்ல: அர்ஜுன்

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் தான் வில்லன் இல்லை என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.

இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.

No comments: