Monday, December 8, 2014

திருப்பதியில் ராஜபக்சேவை அனுமதித்தால் சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் முற்றுகை போராட்டம்: சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக்கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். 
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்சே, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது.
இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய ராஜபக்சே, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோயில்களை ஈழத்தில் தரைமட்டமாக்கிக் கொக்கரித்த ராஜபக்சேவுக்கு வழிபாடு ஒரு கேடா?
ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள். அப்படியிருக்க எங்கள் இனத்தையே கருவறுத்த ராஜபக்சேவை உங்கள் மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது எங்கள் இனத்தை ரணமாக்கும் செயல். ஆந்திர மண்ணுக்குத் துரோகம் செய்த ஒருவனை நிச்சயமாக தமிழ் மக்கள் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டார்கள். ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்சே வருகைக்குத் தடை விதிக்க வேண்டும்.
மத்திய அரசும் ராஜபக்சேயின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சேயின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும். தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: