Thursday, March 17, 2011

அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு: விஜயகாந்த் தலைமையில் 3-வது அணிஅமைக்க முயற்சி; 6 கட்சி தலைவர்கள் ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் தே.மு. தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம் உள்பட 17 கட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதான் மெகா கூட்டணி என்று அ.தி.மு.க. வினர் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர். தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது, அ.தி.மு.க. அணி தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் ம.தி.மு.க. மற்றும் இடது சாரிகளுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தையை நேரடியாகவும், பல சுற்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியும் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவை எட்ட இயல வில்லை.

குறிப்பாக ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கும் என்பதில் பேச்சுவார்த்தைத் தொடங்கியதில் இருந்தே இழுபறி ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும் உற்ற தோழனாக இருந்த ம.தி.மு.க.வுக்கு உரிய இடங்களையும், கவுரவத்தையும் அ.தி.மு.க. தராதது இரு கட்சி தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ம.தி. மு.க.வினர் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்தே பேசினார்கள். இறுதியாக அவர்கள் 21 தொகுதிகள் தந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்திருந்தனர். ஆனால் 8 இடங்களுக்கு மேல் தர இயலாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியபோது, இந்த தகவலை அறிந்து ம.தி.மு.க.வினர் மட்டுமின்றி எல்லாருமே அதிர்ச்சி அடைந்தனர். இதுவே அ.தி.மு.க. அணியில் சிக்கல் முற்ற காரணமாகி விட்டது.

இந்த நிலையில் தே.மு. தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இது அந்த கட்சிகளின் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதிகள் எவை-எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்று அ.தி.மு.க. 160 தொகுதிகளுக்குரிய இடம் மற்றும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கூட்டணிக் கட்சிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அ.தி.மு.க. அணி உடையத் தொடங்கியுள்ளது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களுக்கு என்று சில தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதின. அந்த தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்த கூட்டணி கட்சிகள் அ.தி. மு.க.விடம் பட்டியல் கொடுத்திருந்தனர்.

ஆனால் கூட்டணி கட்சிகளின் இந்த பட்டியலையும், கோரிக்கைகளையும் அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டணிக் கட்சியினர், எந்தெந்த தொகுதிகளை விரும்பி கேட்டார்களோ, அந்த தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்து விட்டார். அந்த வகையில் 17 தொகுதிகளை தே.மு. தி.க. இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது விஜயகாந்துக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சிக்காக கேட்ட 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் இந்த முடிவு தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் ஆகிய 6 கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்து என்ன செய்வது என்ற ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு இந்த கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் தன்னிச்சையான முடிவால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 6 கட்சி தலைவர்களும் கூடி தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்து வருகிறார்கள். இன்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அது போல தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்டு, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணி கழகம் தலைவர் சேதுராமன், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தாங்கள் இழந்த தொகுதிகள், அ.தி.மு.க. தலைமை தங்களிடம் நடந்து கொண்ட விதம், தங்களை ஆலோசிக்காமல் அ.தி.மு.க. தன்னிச்சையாக நடந்து கொண்ட போக்கு குறித்து விவாதித்தனர். காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் இருவரும் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொகுதிகளை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். இன்று மாலை எங்கள் முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் நிருபர்கள் வலியுறுத்தி கேட்டபோது, அவர்கள் இன்று மாலை உங்களுக்கு இனிப்பான செய்தி தெரிவிக்கப்படும் என்றனர்.

இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கார்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் நேராக கோயம் பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களை தே.மு.தி.க. இளைஞர் அணி மாநில தலைவர் சுதீஷ் வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். மார்க்சிஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தா.பாண்டியன், மகேந்திரன், புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சேதுராமன், இசக்கி, பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவன் ஆகியோர் தே.மு.தி.க. அலுவலகத்துக்கு சென்றனர். 12.15 மணிக்கு அவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார்கள்.

நீண்ட நேரம் அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை 6 கட்சித் தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதாவிடம் பேசும் போது ஓரிரு தொகுதிகளை விட்டு கொடுத்து சமரசமாக செல்லலாமா? என்றும் பரிசீலித்தனர். மீண்டும் பேச்சு நடத்த அ.தி.மு.க. சம்மதிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் 6 கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து தனி அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க.வின் முடிவால் அதிருப்திக்குள்ளாகி உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தே.மு.தி.க. தலைமையில் 3-வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் ம.தி.மு.க., நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி ஆகியவையும் சேரும் என்று கூறப்படுகிறது.

அப்போது 3-வது அணியில் 9 கட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த கட்சிகளில் உள்ள தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக அந்த அணியில் இடம் பெற்றிருந்த 9 கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பது, அ.தி.மு.க. தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் 9 கட்சி தலைவர்களிடம் யாரிடமும் அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் தொடர்பு கொள்ள வில்லை. அ.தி.மு.க. தரப்பில் இது தொடர்பாக விசாரித்த போது எல்லோரும் மவுனம் சாதித்தனர். அ.தி.மு.க. அணியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர்கள் மட்டுமே அமைதியாக உள்ளனர்.

No comments: