Monday, March 21, 2011

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த், கார்த்திக்கை தாக்கி பேசமாட்டேன்; நடிகை குஷ்பு சொல்கிறார்

.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது பிரசார பயண திட்டத்தை தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டது. நடிகை குஷ்பு வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு இடைவிடாமல் பிரசாரம் ஓயும் 11-ந் தேதி வரை அவர் பொதுக்கூட்டங்களில் பேசிஆதரவு திரட்ட உள்ளார்.

26-ந் தேதி தேனி தொகுதியிலும், 27-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 28-ந் தேதி திருப்பூர் தொகுதியிலும், 29-ந் தேதி நீலகிரி தொகுதியிலும், 30-ந் தேதி கோவை தொகுதியிலும், 31-ந் தேதி ஈரோடு தொகுதியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி நாமக்கல் தொகுதியிலும், 2-ந் தேதி கரூர் தொகுதியிலும், 3-ந் தேதி பெரம்பலூர்,

அரியலூர் தொகுதியிலும், 4-ந் தேதி தஞ்சை தொகுதியிலும், 5-ந் தேதி திருவாரூர் தொகுதியிலும், 6-ந் தேதி காரைக்கால் தொகுதியிலும், 7-ந் தேதி கடலூர் தொகுதியிலும், 8-ந் தேதி விழுப்புரம் தொகுதியிலும், 9-ந் தேதி திருவண்ணாமலை தொகுதியிலும், 10-ந் தேதி காஞ்சீபுரம் தொகுதியிலும், 11-ந் தேதி புதுவை தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது, எதை முன் நிறுத்தி பேசுவீர்கள்? உங்கள் பிரசார வியூகம் என்ன? என்று நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை தேர்தலில் பேசப் போவதாக சொல்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஊடகங்களில் மட்டும் தான் பூதாகரமாக காட்டப்படுகிறது. இதனால் மக்களுக்கு ஒன்றுமில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அதிக பட்ச ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தற்போது இது சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. விசாரணைக்குப்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று வெளியில் வருவார்கள். இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு 5 ஆண்டு கால மக்கள் நல தி.மு.க. ஆட்சியை எதிர்க்கட்சிக்காரர்களால் விமர்சிக்கவே முடியாது.

மக்கள் நல பணி செய்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ள எதிர் அணியிடம் எதுவுமே இல்லை. அதனால் தான் ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் என்கிறார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் நான் தாக்கி பேசப்போவதில்லை. விஜயகாந்த்தையோ, கார்த்திக்கையோ, அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து நிச்சயம் நான் பேசமாட்டேன்.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ள மக்கள் நலப்பணிகளும், தற்போதைய தேர்தல் அறிக்கையும் நிச்சயம் தி.மு.கழக ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் மலர செய்யும். என்னுடைய பிரசாரமும் தி.மு.க.வின் மக்கள் நல சேவைகளையும், சாதனைகளையும் முன் நிறுத்தியே இருக்கும். தலைவர் கலைஞர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். பழி வாங்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு இது உகந்தது அல்ல. தமிழ்திரை உலகம் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டது போன்ற மாயை ஏற்படுத்துகிறார்கள்.

நான் கூட ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறேன். பிறகு கலைஞர் டி.வி.க்கு சென்றேன். இதையடுத்து தி.மு.க.வின் கொள்கைகள் பிடித்திருந்ததால் அந்த கட்சியில் சேர்ந்தேன். எனவே கோலிவுட் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாக சொல்ல முடியாது. நடிகர் விஜய் அ.தி. மு.க.வுக்கு பிரசாரம் செய்வேன் என்று இதுவரை சொல்லவில்லையே? எனவே நடிகர்-நடிகைகள் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டார்கள் என்று சொல்ல இயலாது.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

No comments: