Wednesday, March 2, 2011

'முத்துக்குமாரை கொன்றவன்...', 'மாவீரன் ராஜபக்சே...'- சீமானுக்கு வந்த கொலை மிரட்டல் கடித விவரம்

சென்னை: மாவீரன் ராஜபக்சேவை எதிர்க்கக் கூடாது. இல்லாவிட்டால் உங்கள் கட்சியின் முத்துக்குமாரைக் கொன்றது போல உங்களையும் கொல்வேன், என்று இயக்குநர் சீமானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலைமிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இயக்குநரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு புதுச்சேரியிலிருந்து ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்தக் கடிதமும் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அந்தக் கடிதத்துடன் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், புதுச்சேரியில் இருந்து ராம்கோபால் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சூளைமேடு கில் நகரில் உள்ள தமிழ் முழக்கம் அலுவலகத்துக்கு வந்தது.

அதில், எச்சரிக்கை... எச்சரிக்கை என தொடங்கி சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

நான் உங்கள் கட்சியின் புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்றவன். என் கட்டளைகளை ஏற்று நீங்கள் நடக்க வேண்டும். விடுதலைப்புலிகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது.

நாம் தமிழர் கட்சியை கலைத்து விட வேண்டும். மாவீரன் ராஜபக்சேவை எதிர்க்க கூடாது. மத்திய மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும்.

புதுக்கோட்டையில் புரட்சி செய்யக்கூடாது. மீறினால் கடுமையான பிரச்சனையை சந்திக்க நேரிடும். புதுச்சேரியில் உள்ள தாஸ், மகேஷ் சென்னையில் உள்ள ராசா, காமராசு மற்றும் கணேஷ், பிரபு ஆகிய உங்கள் கட்சியினர் வேட்டையாடப்படுவார்கள், என்று கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்றவன் என்று தன்னை துணிச்சலோடு அடையாளப்படுத்தியுள்ள மர்ம நபரை போலீசார் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்ற கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இது போன்ற மிரட்டல் கடிதங்களால் நாம் தமிழர் கட்சியை முடக்கி போட முடியாது, என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மிரட்டல் கடிதம் நம்பர் 33, விட்டல் நகர், சண்முகபுரம், புதுவை என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

No comments: