Sunday, March 20, 2011

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக கடந்த 2 நாட்களாக தே.மு.தி.க. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 2-வது நாளான நேற்று மாலை 4 மணிக்கு தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதா மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

விடிய விடிய 13 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை இன்று காலை 5 மணியளவில் முடிவடைந்தது. இரவு முழுவதும் பேச்சு வார்த்தை நீடித்ததால் பத்திரிகையாளர்களும் போயஸ் கார்டனில் காத்துக் கிடந்தனர்.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது. தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை கட்சி தலைவர் விஜயகாந்திடம் ஒப்படைப்போம். அவர் சரிபார்த்த பிறகு அ.தி.மு.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேட்பாளர் பட்டியலை இன்று மாலை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடிய விடிய பேச்சு வார்த்தை நீடித்ததால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று பிற்பகலுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும். உடனடியாக தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியிடப்படும்

No comments: