Wednesday, March 9, 2011

அ.தி.மு.க., அணியில் மவுனம் இன்று கலையுமா? தொகுதி பங்கீடு இறுதி பெறுகிறது

சென்னை: அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் ரகசியமாக நடந்து முடிந்து விட்டது. தங்கள் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய இறுதி முடிவை அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மூன்று கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க.,விற்கு 41 தொகுதிகள் மற்றும் இதர கட்சிகளுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவை, கடந்த 6ம் தேதி எடுக்க இருந்தனர். தி.மு.க., கூட்டணியில் திடீர் திருப்பமாக தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏற்பட்டது. அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இடம் பெறுமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் மூன்று கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி இறுதி செய்யும் பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., தள்ளி வைத்தது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலில் ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அ.தி.மு.க., ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. தங்களது தொகுதி பங்கீடு எண்ணிக்கையின் இறுதி முடிவை, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம் ஒப்படைத்து விட்டன. அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 15 தொகுதிகளும் கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளன. அதேபோல், ம.தி.மு.க., தரப்பு நேற்று 25 தொகுதிகளை கேட்டுள்ளது. நேற்று காலை, அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் மாரியப்பன், பாலவாக்கம் சோமு, குருநாதன் சென்று, தங்களது கட்சி தொகுதிகளின் பங்கீடு எண்ணிக்கை முடிவை கொடுத்தனர். மூன்று கட்சிகள் மற்றும் சில சமுதாய கூட்டமைப்பு கட்சிகளுடன் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு இன்று முடிவடையும் வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: