Tuesday, March 8, 2011

அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்?

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏற்கெனவே மூன்று முறை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

No comments: