Monday, November 26, 2012

அடுத்த மாதம் 16-ந்தேதி பரமக்குடியில், கண்டன பொதுக்கூட்டம்: நடிகர் கார்த்திக் அறிவிப்பு

மதுரை அருகே தேவரின மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் டிச. 16-ம் தேதி பரமக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும், என நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, மாநில கமிட்டி உறுப்பினர் சாந்திபூசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பாலமுருகன், பூபாலன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கார்த்திக் பேசுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டு, திரும்பியவர்கள் மீது மதுரை அருகே தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் பரமக்குடியில் வரும் டிச. 16-ம் தேதி நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 
 முறையான அனுமதி பெற்று நடைபெறும் அந்தக் கூட்டத்துக்கு, அமைதியான முறையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 
 மேலும் அவர், நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். 
 இது சென்னையில் விழாவாக நடத்தப்படும் என்றார். 
 கட்சி நிர்வாகி துர்க்கைலிங்கம் நன்றி கூறினார்.

No comments: