Wednesday, November 21, 2012

3 புதிய படங்களில் மீண்டும் நடிக்கிறேன்: மனோரமா

நடிகை மனோரமா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்து காலிலும் அடிப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

தற்போது உடல் நிலை பூரண குணமாகி உள்ளது. இதனால் திரும்பவும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து மனோரமா அளித்த பேட்டி வருமாறு:- 

நான் நன்றாக இருக்கிறேன். ‘சிங்கம்-2’, ‘பேராண்டி’ ஆகிய இரு தமிழ் படங்களிலும், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற இந்தி படத்திலும் நடிக்கிறேன். ‘சிங்கம்’ படத்தில் எனது நடிப்பு நன்றாக இருந்ததாக பாராட்டப்பட்டது. எனவே ‘சிங்கம்-2’ படத்திலும் நானே நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஹரி என்னிடம் வற்புறுத்தினார். எனக்கு மகிழ்சியாக இருந்தது. சம்மதித்தேன். 

தியாகராய நகரில் உள்ள எனது வீட்டில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அனுஷ்காவும், நானும் இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர். எனது வசதிக்காகவே வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அனுஷ்கா, ஹரியுடன் பணியாற்றியது சந்தோஷமாக இருந்தது. 

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்தி படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இரு மாநிலம் சம்மந்தப்பட்ட கதையை படமாக்குவதாகவும் அதில் தீபிகா படுகோனேயின் அத்தை வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். அப்படத்தில் நான் தமிழில் வசனம் பேசி நடிக்கிறேன்.

இவ்வாறு மனோரமா கூறினார்.

No comments: