Wednesday, March 6, 2013

சேனல்-4 ஊடகத்துக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவலை வழங்கவில்லை!

சேனல்-4 ஊடகத்துக்கு இலங்கையில் இருந்து யாரும் தகவல்கள் எதையும் வழங்கவில்லை என்று அந்த ஊடகத்தின் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.




சேனல்-4 தொலைக்காட்சி ஊடகம், தாங்கள் தயாரித்துள்ள “மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களம்” என்ற குறும்படத் தயரிப்பின்போது இலங்கையில் வசித்துவரும் எவரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் கெல்லம் மேக்ரே இதனைத் தெரிவித்துள்ளார்.



இந்த வீடியோ தயாரிப்புக்கு ஆதாரங்களை வழங்கியுள்ள இலங்கையில் வசிக்கும் நபர்களை கைது செய்யப் போவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்ததாகத் தெரிகிறது. திவயின பத்திரிகை செய்தியில் இது வெளிப்பட்டிருந்தது.



இதனைத் தொடர்ந்து சேனல்-4ன் மெக்ரே வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கையில் வசிக்கும் எவரும் சேனல்- 4க்கு ஆதாரங்களை வழங்கவில்லை. மேலும் இந்த ஆதாரங்களைத் திரட்டுவதற்காக சேனல்-4 தொலைக்காட்சி யாருக்கும் நிதியுதவி செய்யவும் இல்லை. இந்தத் தகவல்கள் கிடைத்த விதம் குறித்து இலங்கை அரசு மக்களிடம் அச்சுறுத்தலை மேற்கொள்வது முறையற்ற செயல் என்று கூறியுள்ளார் மெக்ரே.



சேனல்-4ன் இந்த வீடியோக்களால், உலக நாடுகளின் கவனம் இலங்கையின்மீது திரும்பியுள்ளது. நடுநிலை வகிக்கும் பல நாடுகளும் இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக யோசித்து வருகின்றன என்றும் கூறினார் மெக்ரே.



அதேநேரம், இந்த வீடியோக் காட்சிகள் குறித்து தனது கருத்தினைக் கூறிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, “நிரூபிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை மேலும் மேலும் ஏதாவது செய்து மறைக்க முற்படுவது, பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது” என்று கூறியுள்ளதையும் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார் கெல்லம் மெக்ரே.

.

No comments: