Friday, March 1, 2013

நேதாஜி பிறந்த நாளை தேசபக்தி தினமாக அறிவிக்கவேண்டும் பார்வர்டு பிளாக் மாநாட்டில் தீர்மானம்

நேதாஜி பிறந்த நாளை தேசபக்தி தினமாக அறிவிக்கவேண்டும் என்று, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




மாநில மாநாடு



அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–



தென்மாவட்டங்களில் தொழில் வளம், வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டின் நீண்டநாள் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா கட்டிடங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. இதில் தமிழக அரசு தலையிட்டு இந்த பூங்காக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தேசபக்தி தினம்



இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23–ந்தேதியை தேசபக்தி தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.



மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான உசிலம்பட்டி பகுதியில் நீண்டகாலம் நிலுவையில் உள்ள 58 கிராம கால்வாய் திட்டத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் நடக்கவில்லை. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.



மதுரை– ராமேசுவரம், மதுரை– கொச்சி, மதுரை– தென்காசி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.



மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மீண்டும் தேர்வு



மாநாட்டில் தமிழ்மாநில பொதுச் செயலாளராக பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக பி.கே.எம்.முத்துராமலிங்கம், பொருளாளராக மாயத்தேவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



No comments: