Saturday, April 30, 2011

“தெய்வத்திருமகன்” பட பெயருக்கு எதிர்ப்பு; நடிகர் விக்ரம் வீடு முற்றுகை; 50 பேர் கைது; போலீஸ் குவிப்பு



நடிகர் விக்ரம் “தெய்வத் திருமகன்” என்ற படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் தலைப்பு “தெய்வத்திருமகன்” என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவர் பேரவை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை “தெய்வத்திருமகன்” என்று அழைத்து வருகிறோம். அந்தப் பெயர் அவருக்குத்தான் பொருந்தும், சினிமா படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்திற்கு அந்தப் பெயரை சூட்டி இருப்பது அவரை அவமதிப்பதாகும்.

எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் “தெய்வத் திருமகன்” படத்தின் தலைப்பை எதிர்த்து சென்னையில் இன்று நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

விக்ரம் வீடு திருவான்மியூர் அருண்டேல் கடற்கரை சாலையில் உள்ளது. இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் முத்தையா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக விக்ரம் வீட்டுக்கு சென்று முற்றுகையிட்டனர்.

படத்தின் தலைப்பை மாற்றக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் கிடைத்ததும் அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். முத்தையா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக விக்ரம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்ப்பு காரணமாக படத்தின் தலைப்பை “தெய்வத்திரு மகள்” என்று மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெரிவித்துள்ளார்.

No comments: